தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Saturday 5 November, 2011

போதிதருமன் - முன்பு தமிழரின் அடையாளம்: தற்போது?

முன்பு நிகழ்ந்தது:
போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார்.
இவரது வாழ்க்கையைப் பற்றி குறைவான சமகாலத்திய தகவல்களே கிடைக்கின்றன. பிற்காலத்திய குறிப்புகளும் கதைகளுடன் கலந்து தெளிவற்ற நிலை உள்ளன. இவர் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ இளவரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறிய பிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மர் அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது. சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்

போதி தருமரின் சமகாலத்தவர் கூற்றுக்கள்

போதி தருமர் பற்றி அவரது சமகாலத்தவர்களால் எழுதப்பட்ட கூற்றுக்கள் இரண்டு காணக் கிடைக்கின்றன.

யாங் சுவான்சீ

லுவோயங் பகுதியில் அமைந்துள்ள பௌத்த மடாலயங்களின் குறிப்புக்கள் கிபி 547 ஆம் ஆண்டில் மகாயான பௌத்த ஆக்கங்களைச் சீனமொழிக்கு மொழிபெயர்த்த யாங் சுவான்சீ என்பவரால் எழுதப்பட்டவையாகும்.
அக்காலத்தில் மேற்குப் பகுதியில் நடு ஆசியாவிலிருந்து வந்த பாரசீகரான போதி தருமா என அறியப்பட்ட ஒரு துறவி இருந்தார். அவர் காட்டு எல்லையினூடாகச் சீனாவை அடைந்தார். கதிரொளியிற் பளிச்சிடும் [யோங்னிங்சி தூபியின்] தங்கத் தட்டுக்களைப் பார்த்தும், அதனூடு செல்லும் ஒளி மேகத்தில் கலப்பது போன்றிருப்பதைக் கண்டும், காற்றில் அசைந்தாடும் மாணிக்கம் பதித்த மணியின் ஓசை வானத்தை அடைவது போன்று இருப்பதைக் கண்டும் அவர் அதன் புகழ் பாடினார். அவர் இப்படி விளித்தார்: "மெய்யாகவே இது ஆவிகளின் வேலை". அவர் மேலும் கூறினார்: "நான் 150 ஆண்டு அகவையினன். நான் எத்தனையோ நாடுகளைக் கடந்து வந்துள்ளேன். கிட்டத்தட்ட நான் போகாத நாடே இல்லை எனக் கூறலாம். தொலை தூரத்திலிருக்கும் இது போன்ற பௌத்த நாடாயினும் சரியே." அவர் அதனைப் புகழ்ந்தேற்றியதுடன் தன் கரங்களைக் கூப்பி நாட்கணக்காக வைத்திருந்தார்.

தான்லின்

இரண்டாவது குறிப்பு தான்லின் (506–574) என்பவரால் எழுதப்பட்டது. தான்லின் எழுதிய "தரும போதகரின்" சுருக்கமான வாழ்க்கை வரலாறு, போதி தருமரே எழுதியதாகப் பொதுவாகக் கருதப்படும் இரு வாயில்களும் நான்கு செயல்களும் என்பதற்கு அவர் எழுதிய முன்னுரையில் போதி தருமா ஒரு தென்னிந்தியர் எனக் குறிப்பிடுகிறார்:
தரும போதகர் தென்னிந்தியாவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த ஒருவராவார். அவர் இந்தியாவின் சிறந்த அரசரொருவரின் மூன்றாம் மகன். மகாயான வழியிலேயே அவரது குறிக்கோள் இருந்தது. அதனால் அவர் தனது வெண் துகிலை நீக்கிவிட்டு, துறவிகள் அணியும் கருந்துகிலுக்கு மாறினார் வேற்று நாடுகளில் மெய்யான போதனை இல்லாமலாவதைக் கண்டு வருந்திய அவர் நெடுந் தொலைவிலுள்ள மலைகளையும் கடல்களையும் கடந்து ஹான் மற்றும் வை ஆகிய இடங்களிற் போதிப்பதை நோக்கமாகக் கொண்டு பயணித்தார்.
போதி தருமர் சீடர்களைக் கொண்டிருந்தார் என்னும் தான்லினின் கூற்று, குறிப்பாக அவர் டாஒயூ மற்றும் ஹூயிக்கே என்போரைச் சீடராகக் கொண்டிருந்தார் என்னும் கூற்று இங்கு குறிப்பிடத் தக்கது. மேற்படி இருவருள் பின்னவரான ஹூயிக்கே என்பவர் போதி தருமர் பற்றிய இலக்கிய ஆக்கங்களைப் பின்னர் இயற்றியவராவார்.
தான்லின் போதி தருமரின் சீடரொருவரென்றே பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் அவர் போதி தருமரின் சீடரான ஹூயிக்கேவின் சீடராக இருந்திருப்பதற்கான சாத்தியமே கூடுதலாக உள்ளது.

குங்ஃபூவும் போதி தருமனும்

போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.
1.கல்வெட்டு சான்று
சீனக்கோயிலில் உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.
2.டான்லின் பதிவுகள்
டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது. அந்த பேரரசன் நான்காம் கந்தவர்மன் என்று சிலர் கருதுகின்றனர்.
3.டௌசுவான் பதிவுகள்
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.
4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.
5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.
6.யொங்சியா பாட்டு
யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)

தற்போது நிகழ்வது:

இவ்வளவு சான்றுகள் போதிதருமன் அவர்களின் பழம்பெருமை கூறுவதாக உள்ளது. தற்போது போதிதருமனின் வாழ்க்கையினை கருவாக கொண்டு ஏழாம் அறிவு திரைப்படம் வெளிவந்துள்ளது. ஆரம்பத்தில் தமிழரின் அறியப்பட்டிராத அடையாளம் போதிதருமன் என்று விளம்பரமும் செய்யப்பட்டது பட இயக்குனரால். போதிதருமன்  தமிழர் என்பதால் நமக்கெல்லாம் பெருமை என்று படக்குழுவினரால் பெருமைப்பட தெரிவிக்கப்பட்டது.  நமக்கும் பூரிப்பும் பெருமையும் ஏற்பட்டது.

சக்திவாய்ந்த ஒன்று மீடியா அதுவும் திரைப்படம். ஆனால் வரலாறு என்று அவர்களால் பெருமைபட தெரிவிக்கப்பட்டவை தற்போது செல்வத்திற்கும்(பணம்), புகழுக்கும் இசைந்து மாறியுள்ளது. வரலாறு மாற்றப்பட முயற்சி செய்யப்பட்டுள்ளது. வியாபாரமாக்கப்பட்டுள்ளது. ஆம் தெலுங்கில் வெளிவந்த படம் அவர் குண்டூரினை சேர்ந்தவர் என்றும், ஹிந்தியில் தரவி எனும் பகுதியை சேர்ந்தவர் என்றும் அந்தந்த பகுதி மக்களை திருப்திபடுத்துவதற்காக திரித்து மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிறந்த இட வரலாறு மாறியது எதற்காக? போதிதருமன் வாழ்கை உண்மையை திரையில் வெளிகொணர்ந்த படக்குழுவினரும் இயக்குனரும் ஏன் இந்த மாற்றத்திற்கு அனுமதித்தனர். அப்படியே பல்லவ இவ்ரசனாகவே தமிழ் மைந்தனாகவே காட்டியிருக்கலாமே. அப்போ பணம் பத்தும் செய்யும் என்பது உண்மையே. ஆறறிவு உள்ளவர்கள் சிந்திக்கவும் ஏழாம் அறிவு என்ற பெயரில் வரலாறே மாற்றப்படுகிறது...    

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...